தொழில்துறை அமைச்சர் பேச்சு குறித்து ஒருவர் பதிலடி கொடுத்துள்ள பதிவு
அனுப்புதல் இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை.
பெறுதல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ள எனது மாத ஊதியமான 1.25 இலட்சத்தில் மாதந்தோறும் வழங்கப்படாமல் என்னிடமிருந்து திருடப்பட்டு / ஏமாற்றப்பட்டு வரும் சுமார் 90,000 ரூபாயை திருப்பித்தர நிதித்துறை அமைச்சகத்திற்கு ஆணையிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
என்று புத்தி கெட்ட தனமா முதல்வருக்கு கடிதம் அனுப்பலாம்னு நினைத்தேன்.
ஆனால், நானென்ன அமைச்சரா? இல்ல சட்டமன்ற உறுப்பினரா? என்னவேனாலும் பேச!
ஆசிரியர் ஆயிற்றே!
அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியராயிற்றே!
அதிலும். . .
அரசியல் கட்சிகளின் பினாமிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து 25% இட ஒதுக்கீடு என்ற பெயரிலும், மீத்திறன் மாணவர்களைத் தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தின் படியும், அரசுப் பள்ளிகளை அழிவிற்கு நேராக அழைத்துச் செல்லும் அரசின் நடைமுறைகளை எதிர்கொண்டு, புறப்பணிகளின்றி, வகுப்பிற்கோர் ஆசிரியர் என்ற நிலையில், நன்றாகப் பயிலும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு நடுவே, 30-க்கும் மேற்பட்ட பதிவேடுகளைப் பராமரித்து, கற்பித்தல் தவிர அரசின் கணக்கெடுப்புப் பணி தொடங்கி ஊசி போடும் பணி வரை அனைத்தையும் மேற்கொண்டு, குறைந்தது 3 வகுப்புகளுக்கு 14 பாடங்களைப் பயிற்றுவித்து, தனியார் பள்ளிகளால் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட, கல்வி ரீதியாகக் கைவிடப்பட்ட / கழற்றிவிடப்பட்ட மாணவ மாணவியர்களுக்கான கல்விக் கலங்கரைவிளக்கமாக இருக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியராயிற்றே.
எனவே நானும் லூசுத்தனமா எனக்கு 1.25 இலட்சந்தேன் சம்பளம்னு சொல்லீட்டு திரிஞ்சா நல்லாவா இருக்கும்.
2019 சனவரியில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட முனைவர் அனுப் சத்பதி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் (Region -3) ஒரு நாளைக்கு ரூ.414.40 குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றது. 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கீடு செய்தால் குறைந்தது மாதம் ரூ.26000/-க்கு மேல் தர வேண்டும் என்கின்றன தொழிற்சங்கங்கள்.
ஆனால், ஒன்றிய அரசின் அறிவிப்பின் படி கடைநிலை ஊழியரின் மாத ஊதியம் ரூ.18,000/- மாநில அரசின் அறிவிப்பின் படி ரூ.15,000/- இது அரசே நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம்.
நிலை இப்படியிருக்க,
‘தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஏழாயிரம் ரூபாய், எட்டாயிரம் ரூபாய் என்று சம்பளம் பெறுகிறார்கள்’ என்று கூறும் மாண்புமிகு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களிடம்,
“இத சொல்ல நீங்க வெட்கப்படனும் Mr.சென்றாயன்!” என்று தான் கூற வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நிகழும் ஆசிரியர்களின் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களே அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தனது கடமையை மறந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தவறான ஊதியத்தை முன்வைத்து முரணான ஒப்பீட்டை ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் மேடையிலேயே கூறுவது என்பது வருந்தத்தக்க நிகழ்வே!
Comments are closed.