பள்ளி நேரத்தில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடத்தை கற்பிக்காமல், மாறுதல் பெற்ற வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தியது, சக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கிட்டதட்ட 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் படிப்படியாக பள்ளிக்கு திரும்பிகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் மத்தியி்ல் கல்வி இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க, ஆசிரியர்கள் கல்விச்சார்ந்த செயல்பாடுகள் கூடுதலாக அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
இப்படி ஒரு சவால் ஆசிரியர்கள் முன்பு இருக்கும் நிலையில், சேலம் மாவட்டம், சேலம் ஊரகம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் நவம்பர் 15ம் தேதியன்று மதியம் 2 மணியளவில் காடையாம்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றி மாறுதல் பெற்ற வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தி கொண்டாடி உள்ளனர்.
இதில் கிட்டதட்ட ஏழு தமைமை ஆசிரியர்கள், நான்கு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட 13 பேர் விதிகள் மீறி தங்கள் பள்ளியில், அலுவலகத்தில் கடமையாற்றாமல், வட்டார வள மைய அலுவலகத்தில் சங்கம் சார்ந்து விழா நடத்தியுள்ளனர்.
குறுவள மைய பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர்கள், உயர் அலுவலரின் அனுமதியின்றி வட்டார வள மையத்தில் குறிப்பிட்ட சங்கம் சாா்ந்த விழாவில் பள்ளி நேரத்தில் பங்கேற்றது விதிகளை மீறி செயலாகும்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளிகளில் மற்றும் அரசு அலுவலகங்களில் சங்க செயல்பாடுகளான கூட்டம் நடத்துவது, விழா எடுப்பது ஏற்புடையது அன்று. அதுட்டுமல்லாமல், அதாவது மதிய நேரத்தில் விழா நடத்தியது விதிமீறலாகும். அவர்கள், பள்ளி வேலை நேரம் முடிந்தபின், இந்த விழாவை வேறு ஒரு பொது இடத்தில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.
கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல், கீழ் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து இவ்வாறு செய்வது விதிமீறல். இவ்வாறு செய்யும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் பள்ளிக்கு செல்கிறார்களா, பாடம் நடத்துகிறார்களா என்பது என்ன நிச்சயம். குறிப்பாக, பள்ளிக்கு ஏழை வரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் இருப்பது, கல்வி உரிமை மறுப்பு செயலாகும்.
மற்றொரு ஆசிரியர் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் இருக்கும் முதன்மை கல்வி அலுவலர் முருகன் அவர்கள் கொஞ்சம் ஸ்டிரிக்ட் என்று சொல்வார்கள். இதுபோன்ற சம்பவம் அவரது கவனத்திற்கு சென்றது இல்லையா என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்திலும், அவர் உரிய விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை அவர்கள் மீது எடுக்க வேண்டும்.